7 பேருக்கு டெங்கு உறுதி... தண்ணீர் தேங்காம பாத்துக்கோங்க... எச்சரிக்கையா இருங்க மக்களே!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 7 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 64 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், கடலூர் வெளிச்செம்மண்டலம் மற்றும் குறிஞ்சிப்பாடி, விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிகளை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவர்கள் செவிலியர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீதமுள்ள 57 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வீட்டின் தோட்டத்தில் உள்ள டயர்கள் மற்றும் தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவற்றில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description