நாலரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 63 சிலை, 11 மணிமண்டபம் திறப்பு பட்டியலிட்டு அரசு

நாட்டிற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களின் தியாகங்களை, வருங்கால இளைஞர்கள் அறிந்து போற்றும் வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில், 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் அறிக்கை:
சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் மொழியை காத்த தியாகிகள் போன்றோரை அனைவரும் போற்றி பாராட்ட, அவர்களின் சிலைகள் மற்றும் மணிமண்டபங்களை, முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தி சிலை; அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுஉள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கிற்கு, இங்கிலாந்து நாட்டில், அவர் பிறந்த கேம்பெர்லி என்ற நகரில், 33.6 லட்சம் ரூபாய் செலவில் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம் காசியில், பாரதியார் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு, 18.6 கோடி ரூபாய் செலவில், அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.
கோவை வ.உ.சி., பூங்காவில், 40 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சி., சிலை; மயிலாடுதுறையில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையாருக்கு, புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.
கடலுார் மாநகராட்சி முதுநகர் காந்தி பூங்காவில் 35 லட்சம் ரூபாய் செலவில், சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை; சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு, தென்காசி விசுவநாதபேரியில், 50 லட்சம் ரூபாயில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிவகங்கை ராகிணிபட்டியில், வேலு நாச்சியார் மணிமண்டப வளாகத்தில், குயிலித்தாய்க்கு சிலை; சுதந்திர போராட்ட வீரர் தனி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி வளாகத்தில் சிலை; தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் நினைவு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், 28 தியாகிகளுக்கு சிலைகள், 12 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 25 தியாகிகளுக்கு மட்டும் சிலைகள் அமைக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.