எ.வ. வேலுவுக்கு நிம்மதி..! லுக் அவுட் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் தடை.!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்திருந்த லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில், எ.வ. வேலு வரும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், எ.வ. வேலு தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை 27-க்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுவரை, எ.வ. வேலுவுக்கு எதிராக கைது உள்ளிட்ட எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், இந்த இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.