
கமல்ஹாசன் அழைத்தாலும் அவருடைய கட்சியில் சேரமாட்டேன்: நடிகர் ஆதி
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேருவதற்கு அழைப்பு விடுத்தாலும் நான் செல்ல மாட்டேன் என பிரபல நடிகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதி பின்னிசெட்டி. ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இவருடைய நடிப்பில் வெளியான ஈரம், மரகத நாணயம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை பெற்றன. அதேபோல தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், அங்கேயும் நல்ல வசூலை ஈட்டின.
இந்நிலையில் ஓசூருக்கு சென்றிருந்த நடிகர் ஆதியிடம் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அரசியலுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறினார்.
மக்களுக்கு நல்ல செய்பவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என்னுடைய ரசிகர்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஓட்டி போடலாம். கமல் அவருடைய கட்சிக்கு அழைப்பு விடுத்தாலும் செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என்னுடைய தொழில், தமிழில் தற்போது கிளாப், பாட்னர் தெலுங்கில் குட்லக் சகி உள்ளிட்ட படங்கள் நடித்து வருவதாக நடிகர் ஆதி கூறினார்.