717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கடைகளின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசின் அறிவிப்புக்கு கடும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இதுவரை மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கடைகள் நிரந்தரமாக செயல்பாட்டை நிறுத்தினவா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு மீண்டும் இயங்கி வருகின்றனவா என்பது குறித்து அரசு எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"உண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா? அல்லது ஆட்சியின் தொடக்கத்தில் மக்களிடையே நல்ல பெயர் பெறுவதற்காக அவசரமாக வெளியிடப்பட்ட அறிவிப்பா?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், "வெட்டி வசனமும், வீண் விளம்பரமுமே இந்த அரசின் அடையாளமாக மாறியுள்ளது" என்று தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் தரப்பில் இதுகுறித்து என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.