dark_mode
Image
  • Thursday, 16 July 2026

ஹைதராபாத் போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு – ஐடி நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் பரிந்துரை

ஹைதராபாத் போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு – ஐடி நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் பரிந்துரை

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐடி நிறுவனங்களின் அலுவலக நேரத்தை மாற்றும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

ஹைடெக் சிட்டி, பைனான்ஷியல் டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட முக்கிய ஐடி மையங்களில் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் அலுவலகங்களை விட்டு வெளியேறுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, நிறுவனங்கள் ஊழியர்கள் வெளியேறும் நேரத்தை 10 முதல் 15 நிமிட இடைவெளியில் மாற்றி அமைக்கலாம் என சைபராபாத் பாதுகாப்பு கவுன்சில், போலீசார் மற்றும் ஐடி நிறுவனங்கள் இணைந்து ஆலோசித்து வருகின்றன.

மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பணியாளர்களுக்கு நெகிழ்வான (Flexible) பணிநேரத்தை ஊக்குவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்த கட்டாய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்கும் முயற்சியாக, கார் ஷேரிங் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது, போக்குவரத்து நிலவரம், மாற்று வழிகள் மற்றும் மழை எச்சரிக்கைகளை உடனுக்குடன் வழங்கும் டிஜிட்டல் வசதிகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனுடன், சைபராபாத் பகுதியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள AI அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்தை நேரடியாக கண்காணித்து, நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் ஹைதராபாத்தின் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வாக அமையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

related_post