dark_mode
Image
  • Friday, 06 June 2025

பாமக போட்டி பொதுக்குழு.. அடுத்த திட்டத்தில் களமிறங்கிய ராமதாஸ்.. புதிய நியமனங்களுக்கு காரணம் அதுதான்

பாமக போட்டி பொதுக்குழு.. அடுத்த திட்டத்தில் களமிறங்கிய ராமதாஸ்.. புதிய நியமனங்களுக்கு காரணம் அதுதான்

விழுப்புரம்: பாமக சார்பாக போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. பாமக பொதுக்குழுவை கூட்டி முக்கிய மாற்றங்களை செய்வதற்காகவே ராமதாஸ் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கேற்ப நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

 

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. பாமக தலைவர் அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியாக விமர்சனங்களை வைத்த நிலையில், அன்புமணி பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அங்கு பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று வெளிப்படையாக ராமதாஸை விமர்சித்தார்.

 

ராமதாஸ் vs அன்புமணி

 

அதுமட்டுமல்லாமல் ராமதாஸின் கொள்கையை கையில் எடுத்து பாமக வழிநடத்த உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக அறிவித்துள்ளார். இதனிடையே பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் ராமதாஸ் - அன்புமணி இடையில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

 

நிர்வாகிகள் நீக்கம்

 

ராமதாஸ் ஒவ்வொரு நாளும் பாமக மாவட்ட நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்து வருகிறார். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 27 புதிய மாவட்ட செயலாளர்களை பாமகவில் புதிதாக நியமனம் செய்துள்ளார்.. அன்புமணி ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாமகவில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அக்கட்சியினர் இருக்கிறார்கள்.

 

ராமதாஸின் அடுத்த திட்டம்

 

பாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், புதிதாக பதவி அளிக்கவும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று அன்புமணி ராமதாஸ் பேசி இருந்தார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காகவே புதிய நியமனங்களை அறிவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

பாமக போட்டி பொதுக்குழு

 

பாமகவின் பொதுக்குழுவை கூட்டி மிக முக்கிய மாற்றங்களை கொண்டு வர ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரை நீக்கியதற்கு பின்னணியும் இந்த திட்டமே இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பாமக நிர்வாகிகள் பலரும் தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் அடுத்ததாக பாமகவில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post