நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நல்லகண்ணுவுக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23 ஆம் தேதி அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகள் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.