dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தே.மு.தி.க இழுபறி நீடிக்கிறது ...?

தே.மு.தி.க இழுபறி நீடிக்கிறது ...?

அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர, தே.மு.தி.க., தலைமை முடிவெடுத்தது. அதே நேரத்தில், 'பா.ம.க., இல்லாத கூட்டணியாக பார்த்து சேரலாம்' என, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தினர். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம்பெறுவது, ஏற்கனவே முடிவாகி இருந்தது.எனவே அவர்கள் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டது, தி.மு.க., கூட்டணியைத்தான்.என்றாலும், அதைப் புறந்தள்ளிவிட்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை தொடங்கினர் பிரேமலதா,- சுதீஷ். 13 'சீட்' தர முன்வந்தது, அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகளும், தேர்தல் நிதியும் வேண்டும் என, தே.மு.தி.க., நிபந்தனை விதித்தது. அதை, அ.தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. எனவே, கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகியது.அடுத்து, அ.ம.மு.க., - தி.மு.க., என, மாறி மாறி பேச்சு நடத்தியது. 10 தொகுதிகள் தருவதாக சொன்ன தி.மு.க., நிதி தர மறுத்து விட்டது. அதை, தே.மு.தி.க., ஏற்காததால், வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., தலைமை, அறிவித்து விட்டது. இதையடுத்து மீண்டும், அ.ம.மு.க.,வுடன் பேச துவங்கியுள்ளது. தினகரனும் செலவுக்கு பணம் தர மறுப்பதால், அங்கும் இழுபறி நீடிக்கிறது.

விஜயகாந்தை, தினகரன் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை.கூட்டணி விஷயத்தில், தே.மு.தி.க., தலைமை தள்ளாடுவது, தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டியிடவும், அவர்கள் விரும்பவில்லை.எனவே, கவுரவமாக தேர்தலை விட்டு ஒதுங்கிக் கொள்வது நல்லது என நினைக்கின்றனர். தனித்துப் போட்டியிட முடிவெடுத்தால், முதலுக்கே மோசமாகி விடும் என, மாவட்ட செயலர்களும் தலைமையை எச்சரித்துள்ளனர்.

related_post