தமிழகத்தில் ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ அறிமுகம்: ஆகஸ்ட் 17 முதல் அமல்
சென்னை: தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் "வருகையில்லா ஆவணப்பதிவு" (Contactless/Presenceless Document Registration) என்ற புதிய டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் புதிய மனைப் பிரிவுகளின் முதல் விற்பனைப் பதிவுகள் ஆகஸ்ட் 17, 2026 முதல் இந்த முறையில் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. பின்னர், அனைத்து வகையான சொத்து மற்றும் ஆவணப் பதிவுகளும் படிப்படியாக இந்த நடைமுறைக்குள் கொண்டு வரப்பட உள்ளன.
இந்த புதிய முறையை விளக்கவும், அதுகுறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் ஜூலை 23 காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை மற்றும் செயல்விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்டிட மேம்பாட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே ஆவணங்களைப் பதிவு செய்ய முடியும். இதனால் நேர விரயம் குறைவதுடன், இடைத்தரகர்களின் தலையீடு குறையவும், சேவையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் பத்திரப் பதிவை நிறைவு செய்யவும் வழிவகுக்கும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.