கர்நாடகாவில் நாளை பந்த்: பஸ், ஆட்டோ, மெட்ரோ இயங்கும்; பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும்
பெங்களூரு: காவிரி நீரை தமிழகத்துக்கு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாளை கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு ஆரம்பத்தில் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பின்னர் தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. காவிரி நீரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையானால் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இயங்க வாய்ப்புள்ள சேவைகள்
பந்த்துக்கு பல முக்கிய அமைப்புகள் ஆதரவு அளிக்காததால், பெரும்பாலான அத்தியாவசிய மற்றும் பொது சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
- மருந்தகங்கள்
- வங்கிகள்
- கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள்
- பிஎம்டிசி பேருந்துகள்
- பெங்களூரு மெட்ரோ
- ஆட்டோக்கள்
- டாக்ஸிகள்
- விமான நிலைய டாக்ஸிகள்
- பள்ளி, கல்லூரி வாகனங்கள்
- ஹோட்டல்கள்
- வணிக வளாகங்கள்
- மளிகைக் கடைகள்
- அரசு அலுவலகங்கள்
- தனியார் நிறுவனங்கள்
- தொழிற்சாலைகள்
- தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள்
தமிழகத்துக்கான பேருந்து சேவை?
தமிழகம்–கர்நாடகா இடையிலான பேருந்து சேவைகள் தற்போது வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நாளைய போராட்டத்தையொட்டி அத்திப்பள்ளி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களால் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, தமிழகத்தில் இருந்து பெங்களூரு அல்லது கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் புறப்படுவதற்கு முன்பு பேருந்து சேவை மற்றும் எல்லைப் பகுதி நிலவரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.
பந்த்துக்கு ஆதரவு யார்?
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, கன்னட சேனை, கன்னட ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆதரவு இல்லை என தெரிவித்தவர்கள்
கர்நாடகாவின் பல்வேறு முக்கிய அமைப்புகள் பந்த்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கர்நாடகா ரக்ஷண வேதிகே பிரிவுகள், விவசாயிகள் அமைப்புகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், ஹோட்டல் சங்கங்கள், கேஎஸ்ஆர்டிசி, பிஎம்டிசி, பெரும்பாலான ஆட்டோ சங்கங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் டிராவல்ஸ் அமைப்புகள் அடங்கும்.
கர்நாடகா அரசு தொடக்கம் முதலே பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிக்குமா?
முக்கிய சேவைகள் மற்றும் பெரும்பாலான போக்குவரத்து அமைப்புகள் செயல்பட உள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், போராட்டத்தின்போது சாலை மறியல், திடீர் ஆர்ப்பாட்டம் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட பகுதிகளில் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம். பயணிகள் நாளைய உள்ளூர் நிலவரத்தை அறிந்த பின்னர் பயணத் திட்டத்தை மேற்கொள்வது பாதுகாப்பானது.