மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்தது எப்படி?.. பல வருடங்கள் கழித்து சொன்ன சசிகலா..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் வருடம் தனது போயஸ்கார்டன் வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அதன்பின், 72 நாட்கள் அவர் அந்த மருத்துவமனையில் இருந்தார்.. அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் மட்டுமில்லாமல் ஒன்றிய அரசு சார்பாக எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்து சிகிச்சை அளித்தார்கள். உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டும் டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணமடைந்தார்..
அவர் மருத்துவமனையில் இருந்த 72 நாட்களும் அவருடைய உடல்நிலை பற்றி எந்த தகவலும் வெளியே வராமல் அவரின் நெருங்கிய தோழி சசிகலா பார்த்துக் கொண்டார். அதிமுக அமைச்சர்களுக்கு கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரை பார்த்தார்கள். எனவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் பேசினார்கள். மக்களும் அதை நம்பினார்கள்.. ஓ பன்னீர்செல்வம் கூட ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கேட்டு தர்மயுத்தம் நடத்தினர்..
ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனையும் அமைத்தது. ஆனால் உண்மை எதுவும் வெளியே வரவில்லை. இந்நிலையில் ராமநாதபுரம் கமுதி அருகே நடந்த கூட்டத்தில் பேசிய விகே சசிகலா ‘அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.. ஒரு கட்டத்தில் உடல்நலம் தேறினார்..
அவரை வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு நல்ல நாள், நல்ல நேரமெல்லாம் பார்த்து வைத்திருந்தேன்.. ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது அதில்தான் அவர் இறந்தார். ஆனால் நான் அவரை கொலை செய்துவிட்டதாக எதிரிகள் என்னென்னவோ பேசினார்கள்.. இதுதான் உங்கள் அரசியலா? இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டுமா?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.