தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? வைகோ சொன்ன பரபரப்பு கருத்து..!
தமிழக அரசியலில் தற்போது 'கூட்டணி ஆட்சி' மற்றும் 'ஆட்சியில் பங்கு' என்ற விவாதங்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய், தங்களோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஆட்சியில் பங்கு குறித்த சலசலப்புகள் எழுந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் கூறிய கருத்தை 100 சதவீதம் தான் வழிமொழிவதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான மதிமுகவின் இந்த அறிவிப்பு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக தலைமை ஏற்காது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் 2026 தேர்தலிலும் திமுக தனித்து ஆட்சி அமைப்பதையே இலக்காக கொண்டுள்ளது உறுதியாகிறது.