dark_mode
Image
  • Wednesday, 18 February 2026

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு ஏன்? ஆலோசனையில் எல். முருகன் பங்கேற்பு.. பரபரப்பை கிளப்பிய சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு ஏன்? ஆலோசனையில் எல். முருகன் பங்கேற்பு.. பரபரப்பை கிளப்பிய சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது

எடப்பாடி பழனிசாமி , நயினார் நாகேந்திரன் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற நயினார் நாகேந்திரன், அவருடன் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல் முருகனுடன் ஆலோசனை

மேலும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் அந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளார். மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் யார் யாரெல்லாம் பங்கேற்பது என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி இடம் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 1-ல் பிரதமர் மோடி தமிகம் வருகை

மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே கூட்டணியை இறுதி செய்வது குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தமிழக வருவதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை?

குறிப்பாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் (பிப்ரவரி 15 ஆம் தேதி) கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்திருந்தார்.

 

 

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை

இந்த நிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன், எல்.முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், இன்றைய தினம் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார் என்று பதிவிட்டு உள்ளார்.

 

மோடி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ்

அதாவது மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்து மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அதே கூட்டத்தில் தேமுதிகவும் அதிமுகவுடன் இணையும் என்று கூறப்படுகிறது. மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கான அழைப்பிதழை, ஓரிரு நாளில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலமதா விஜயகாந்த் இடம் அதிமுக வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

related_post