dark_mode
Image
  • Friday, 01 August 2025

இன்று இடி, மின்னல், மழை: வானிலை மையம் தகவல்

இன்று இடி, மின்னல், மழை: வானிலை மையம் தகவல்

சென்னை: 'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தென்மேற்கு பருவக்காற்று துவக்கத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த கனமழை, தற்போது ஓய்ந்துள்ளது. திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

மேற்கு திசையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நோக்கி வீசும், காற்றின் வேகத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், ஜூன் 7 வரை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 5 வரை, மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வரை, இடையிடையே 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.