இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது: தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டம், இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) துவக்கி வைக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டமா, உருவாகி இருப்பது தான் தாயுமானவர் திட்டம். கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முன்மாதிரி முயற்சி
இப்படி அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே சென்று போய் கொடுப்பது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிப்பதுடன் கடமை முடிந்து விடுவதாக நாம் நினைப்பதில்லை. அந்தத் திட்டத்தின் பலன், பயன் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்ந்ததா, என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்.
சிரமத்தை உணர்ந்து...!
அப்படி வயது முதிர்ந்தோறும், மாற்றுத் திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலை கடைகளில் செயல்படுத்த போகிறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 980 பேர், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்தி 70 ஆயிரத்து 454 பேர் இந்தத் திட்டத்தால் பயனடைய போகிறார்கள்.
உயிர் காக்கும் கடமை
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்து விடும். இதற்காக கூட்டுறவுத்துறைக்கு ஆகப் போகிற ரூ. 30 கோடியே 16 லட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவு துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகிற மிகப் பெரிய கடமை.
பட்டினி சாவு இல்லாத மாநிலம்
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலை கடைகள் இருக்கிறது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலை கடைகளை திறந்து இருக்கிறோம். கருணாநிதி வழியில் இந்த நியாய விலை கடைகளை நாங்கள் முறையாக சிறப்பாக நடத்துகிற காரணத்தினால் தான் தமிழகம் இன்று பட்டினி சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக முயற்சி எடுத்து இருக்கிறோம்.
வேண்டுகோள்
இந்த நேரத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையும். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர வகையில் நீங்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.