300 புதிய அரசுப் பேருந்துகள் சேவை தொடக்கம்; பயணிகளுடன் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட ஆறு மண்டலங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பேருந்துகள் விரைவில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
நிகழ்ச்சிக்குப் பிறகு, புதிதாக அறிமுகமான பேருந்தில் முதல்வர் நேரடியாகப் பயணம் மேற்கொண்டார். பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்த அவர், நடத்துனரிடம் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக்கொண்டார்.
பயணத்தின் போது பொதுமக்கள் மற்றும் சக பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர், அவர்களுடன் செல்ஃபி மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்தார். மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் பணிகள் குறித்தும் அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து கலங்கரை விளக்கம் வரை சென்று, பின்னர் அதே பேருந்தில் முதல்வர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பினார்.
பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.