நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கன்: உதவிட தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

தியான்ஜின்: ஆப்கன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் மனிதாபிமான அடிப்படையில் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 800 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்பதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந் நிலையில், ஆப்கன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். கடினமான நேரத்தில் துயரம் அடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியமான மனிதாபிமான உதவிகளையும், நிவாரணங்களையும் இந்தியா வழங்க தயாராக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.