dark_mode
Image
  • Friday, 13 February 2026

நாளை மறுநாள் அமித் ஷா வருகை.. காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை மறுநாள் அமித் ஷா வருகை.. காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காரைக்காலில் நாளை மறுநாள் (பிப்ரவரி 14 ஆம் தேதி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

டிரோன்கள் பறக்க தடை

இதன் ஒரு பகுதியாக, அந்த நாளில் காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் டிரோன் கேமராக்கள் பறக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலித்தார்.

பாதுகாப்பு பணியில் காவல்துறை

அமித் ஷா வரும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 700 புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் 400 மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு, சோதனைச் சாவடிகள் மற்றும் நுண்ணறிவு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

கடும் நடவடிக்கை

மேலும், அமித் ஷாவின் வாகன அணிவகுப்பை கட்சி நிர்வாகிகள் அல்லது ஆதரவாளர்கள் பின் தொடர அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமச்சிவாயம் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

அமித் ஷா வருகையை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 11 ஆம் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் பொறுப்பை வகிக்கும் சார் ஆட்சியர் எம். பூஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். நியமன சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், பாஜக மாநில முதன்மை செய்தித் தொடர்பாளர் எம். அருள்முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சார் ஆட்சியர் அறிவுறுத்தல்

இந்த ஆலோசனையில் அமித் ஷாவுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள், மருத்துவ வசதிகள், அவசர சேவை அமைப்புகள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது. சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் தங்களது பொறுப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதிகாரிகள் ஆய்வு

அதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரில் வந்து அமித் ஷா இறங்கவுள்ள காரைக்கால் பாலிடெக்னிக் மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள சந்தைத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு வளையங்கள் அமைத்தல், நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் ஒழுங்குபடுத்தல், வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கீடு போன்ற அம்சங்கள் நேரில் பரிசீலிக்கப்பட்டன.

 

போக்குவரத்து மாற்றங்கள்

அமைச்சரின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் எவ்வாறு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளர் சுந்தர்கோஷ், மாவட்ட துணை ஆட்சியர்கள் ஜி. செந்தில்நாதன் மற்றும் பாலு (எ) பக்கிரிசாமி, உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் வெங்கடகிருஷ்ணன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

related_post