தங்க விலை ஏற்ற இறக்கம்: பழைய நகைகளை விற்பனை செய்யும் இந்தியர்கள் அதிகரிப்பு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த சூழலில், அதிக விலையைப் பயன்படுத்தி பழைய தங்க நகைகளை விற்று லாபம் பெற இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ₹1.44 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், எதிர்காலத்தில் விலை மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றுவதற்குப் பதிலாக, நேரடியாக விற்று ரொக்கப் பணமாக மாற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறைந்தால் பழைய நகைகளின் மதிப்பும் குறையக்கூடும் என்ற அச்சமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக நகை வணிகத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்திய தங்க நகை மற்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு (IBJA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நடப்பு ஏப்ரல்–ஜூன் காலாண்டில் மட்டும் இந்தியக் குடும்பங்கள் சுமார் 50 டன் பழைய தங்கத்தை விற்பனை செய்துள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 43 சதவீதம் அதிகமாகும்.
பழைய தங்க விற்பனை அதிகரிப்பால், நாட்டில் மறுசுழற்சி தங்கத்தின் அளவும் குறிப்பிடத்தக்க வகையில் உயரக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த ஆண்டு மொத்த மறுசுழற்சி தங்கம் 200 முதல் 250 டன் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து புதிய தங்கத்தை இறக்குமதி செய்யும் தேவையும் ஓரளவு குறையலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2026 நிதியாண்டில் சுமார் 72.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.