டிரம்ப்பின் இறக்குமதி வரி விவகாரம்; தற்காலிக அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்., 2ம் தேதி இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்தார். டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகக் கூறி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, 1977ம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் அடிப்படையில் வரியை டிரம்ப் உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதிபரின் அவசர தீர்மானம் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா என்பதை பார்லிமென்ட் விவாதிக்க முடியும். நீதிமன்றம் விசாரிக்க முடியாது என அதிபர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை நிராகரித்த அமெரிக்க வர்த்தக நீதிமன்றம், உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கடுமையாக விமர்சித்தார்.அரசின் வரிவிதிக்கும் முறைக்கு தடை விதிப்பது நீதித்துறையின் அத்துமீறல் என்று விமர்சித்தார். மேலும், தேர்வு செய்யப்படாத நீதிபதிகள் அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வரிவிதிப்பு முறையில் நீதிமன்றம் தடை விதித்த விவகாரத்தில் அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description