dark_mode
Image
  • Monday, 27 April 2026

தெஹ்ரான் பதற்றம் உச்சம்… அமெரிக்காவுக்கு ஈரான் புதிய அமைதி திட்டம்; ஹார்முஸ் திறக்க வாய்ப்பு.!

தெஹ்ரான் பதற்றம் உச்சம்… அமெரிக்காவுக்கு ஈரான் புதிய அமைதி திட்டம்; ஹார்முஸ் திறக்க வாய்ப்பு.!

தெஹ்ரான் பதற்றம் உச்சம்… அமெரிக்காவுக்கு ஈரான் புதிய அமைதி திட்டம்; ஹார்முஸ் திறக்க வாய்ப்பு!

தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தை பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், உலக பொருளாதாரத்தையே பாதித்துவரும் எண்ணெய் நெருக்கடிக்கும், பிராந்தியப் போர் சூழலுக்கும் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

கடந்த வாரம் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பயணம் அறிவிக்கப்பட்டதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உயர்மட்ட குழுவினரை அவசரமாக பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும், பின்னர் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று அராக்சி ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடின்-ஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், சர்வதேச அளவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த பதற்றத்தின் தாக்கம் உலக சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1% க்கும் மேல் உயர்ந்து, ஒரு பேரல் 106.5 டாலர் அளவுக்கு பியூச்சர்ஸ் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கடத்தப்படுவதால், இந்த பிரச்சினை உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அணு ஆயுதம், அணுசக்தி, யூரேனியம் செறிவூட்டல் போன்ற சிக்கலான விவாதங்களை பின்னர் நடத்திவிட்டு, உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை திறப்பு போன்ற அவசர பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும். இதனால் பேச்சுவார்த்தையை விரைவாக முன்னேற்ற முடியும் என ஈரான் கருதுகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து எச்சரிக்கையான நிலைப்பாட்டில் உள்ளார். போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை தடையை தொடர விரும்புவதாக அவர் சிக்னல் அளித்துள்ளார். இதன் மூலம் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை தளர்த்தவும் முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

இந்த புதிய திட்டம் குறித்து இன்று திங்கள்கிழமை வெள்ளை மாளிகையின் Situation Room-இல் டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அங்கு ஈரானுடனான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அராக்சி இன்று மாஸ்கோவில் புடினை சந்திக்க உள்ளார். ஏற்கனவே ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ரஷ்யா வாங்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்கா-ஈரான் மோதலில் ரஷ்யாவின் பங்கு மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈரான் முன்வைத்துள்ள இந்த புதிய அமைதி ஒப்பந்தம் ஏற்கப்பட்டால், போர் நிறுத்தம், ஹார்முஸ் திறப்பு, எண்ணெய் விலை சரிவு போன்ற பல்வேறு மாற்றங்கள் உலகளவில் ஏற்படக்கூடும். ஆனால் டிரம்ப் அரசு எடுக்கும் முடிவே இதற்கான அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகிறது.

related_post