சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்
சென்னை மாநகராட்சியின் 2026-2027- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆா்.பிரியா பிப். 18- ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா். தொடா்ந்து, பிப். 20-இல் விவாதம் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2025-2026 -ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 2025 மாா்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வரி வருவாய் ரூ.5,145.52 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடியாகவும் இருந்தது. மூலதன வரவாக ரூ.3,121.65 கோடியும், மூலதனச் செலவாக ரூ.3,190.61 கோடியும் காட்டப்பட்டது. மொத்த வரவினங்கள் வருவாயாக ரூ.8,267.17 கோடியும், மொத்த செலவினங்களாக ரூ.8,404.70 கோடியும் காட்டப்பட்டது.
கடந்த 2024-2025 -ஆம் ஆண்டின் பற்றாக்குறை ரூ.452.01 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2025-2026 -ஆம் ஆண்டு பற்றாக்குறை ரூ.68.57 கோடி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிகழ் நிதியாண்டுக்கான (2026-2027) சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை வரும் பிப். 18-ஆம் தேதி (புதன்கிழமை) மாமன்றக் கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா தாக்கல் செய்கிறாா். தொடா்ந்து பிப். 20-இல் மீண்டும் மாமன்றக் கூட்டம் கூடி நிதிநிலை அறிக்கை மீதான விவதாம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்தல் அறிவிப்புகள் தாராளம்: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிதிநிலை அறிக்கையில் மக்களைக் கவரும் வகையில் சலுகை, இலவசத் திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சியினா் தெரிவிக்கின்றனா். அதனால், மாநகராட்சி நிதிநிலை அறிக்கை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.