காங்கிரஸிலிருந்து தவெகவுக்கு யார் சென்றாலும் தடுக்க முடியாது: திருநாவுக்கரசர்
திருச்சி: காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய விரும்புபவர்களை யாராலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் தேர்தலுக்கு முன்பும் பின்பும் கூட்டணிகள் மாறுவது புதிய விஷயம் அல்ல என்றும், கூட்டணி மாற்றங்களைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறினார்.
அரசியல் விமர்சனங்களை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்றும், போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளை சட்டத்தின் அடிப்படையில் கையாள வேண்டுமே தவிர, தேவையற்ற பதற்றம் ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசை விமர்சிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஒவ்வொரு சம்பவத்தின் தன்மை மற்றும் சட்ட நடைமுறைகளைப் பொறுத்தே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸிலிருந்து தவெகவுக்கு செல்ல விரும்பும் தலைவர்கள் அல்லது நிர்வாகிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் சில துறைகளில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், இதுகுறித்த அரசியல் விவாதங்கள் மாநில அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன.