dark_mode
Image
  • Monday, 06 October 2025

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து : 9 வடமாநிலத் தொழிலாளர்கள் பலி!

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து : 9 வடமாநிலத் தொழிலாளர்கள் பலி!

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் எண்ணூரில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று நடைபெற்ற பணியின் போது முகப்பில் அமைக்கப்பட்ட சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 9 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராட்சத வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சாரம் விழுந்ததில் மேலும் பலருக்கு காயம் உண்டான நிலையில், அவர்கள் சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்துறை அமைச்சர் சிவசங்கர், மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனையும்
உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “இன்று(30.09.2025) எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியின் போது சாரம் சரிந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், காயமுற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. இந்த துயரச் சம்பவம், கட்டுமானப் பணிகளின் பாதுகாப்பு குறித்த அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

முறையான திட்டமிடல் இல்லாமை, கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, கட்டுமானப் பொருட்களின் தரக்குறைவு போன்றவையே இத்தகைய துர்மரணங்களுக்கு காரணமாகின்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கவேண்டும். விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

related_post