PF பணம் பெற அலைச்சல் முடிவு.? புதிய ஆட்டோ செட்டில்மென்ட் திட்டம் அறிவிப்பு
Employees' Provident Fund Organisation மூலம் வழங்கப்படும் பி.எஃப் (PF) தொகையைப் பெறும் நடைமுறையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது ஓய்வுபெறும் போது அல்லது அவசர தேவைகளுக்காக PF தொகையை கிளைம் செய்யும் பணியாளர்கள் பல கட்ட விண்ணப்பங்கள், ஆவணச் சரிபார்ப்புகள், தாமதங்கள் மற்றும் அலுவலக அலைச்சல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சிக்கல்களை குறைக்கும் வகையில், PF கிளைம் செயல்முறையை முழுமையாக எளிமைப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய PF ஆணையர் Ramesh Krishnamurthy தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின் படி, இனிமேல் ரூ.5 லட்சம் வரையிலான PF கிளைம்கள் ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ முறையில் செயல்படுத்தப்படும். அதாவது, உறுப்பினர்கள் ஆன்லைனில் கிளைம் செய்தவுடன் கூடுதல் மனிதச் சரிபார்ப்பு அல்லது நீண்ட கால காத்திருப்பு இல்லாமல், தகுதி சரியாக இருந்தால் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் தானாக செலுத்தப்படும். இந்த புதிய முறை மூலம் கிளைம் செய்த மூன்று நாட்களுக்குள் பணம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த மாற்றம் குறிப்பாக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. மருத்துவ அவசரம், வீட்டு தேவைகள், கல்விச் செலவுகள் போன்ற காரணங்களுக்காக PF பணத்தை உடனடியாகப் பெற வேண்டிய சூழல்களில் இது உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், இந்த தானியங்கி செட்டில்மென்ட் முறையால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி EPFO உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.