Air India டிக்கெட் விலை உயர்வு: ஏப்ரல் 8 முதல் புதிய கட்டண முறை அமல்
ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெட் எரிபொருள் (ATF) விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 8 முதல் புதிய எரிபொருள் கூடுதல் கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது.
இந்த மாற்றத்தால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்கின்றன. இதுவரை இருந்த நிலையான கட்டண முறையை நீக்கி, பயண தூரத்தின் அடிப்படையில் புதிய கட்டண அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்களுக்கு புதிய கட்டணம்:
- 500 கி.மீ வரை – ₹299
- 501–1,000 கி.மீ – ₹399
- 1,001–1,500 கி.மீ – ₹549
- 1,501–2,000 கி.மீ – ₹749
- 2,000 கி.மீ மேல் – ₹899
சர்வதேச பயணங்களுக்கும் தாக்கம்
சர்வதேச வழித்தடங்களிலும் எரிபொருள் கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு பயணங்களும் அதிக செலவாகும்.
ஏன் இந்த உயர்வு.?
உலகளவில் ஜெட் எரிபொருள் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் $99.40 இருந்த விலை, மார்ச் இறுதியில் $195.19 ஆக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சுத்திகரிப்பு செலவுகள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
எரிபொருள் செலவுகள் அதிகரித்ததால், விமான நிறுவனங்கள் கட்டணங்களை திருத்துவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. இதனால், ஏப்ரல் 8 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வது பயணிகளுக்கு அதிக செலவாகும்.