dark_mode
Image
  • Sunday, 24 August 2025

15 இடங்களில் மண்சரிவு- பெங்களூரு ரூட்டில் ரயில்கள் சேவை நிறுத்தம்!

15 இடங்களில் மண்சரிவு- பெங்களூரு ரூட்டில் ரயில்கள் சேவை நிறுத்தம்!

கர்நாடகத்தில் கனமழை தீவிரம் அடைந்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு ரூட்டில் ரயில்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளை பலத்த மழை தாக்கி வருகிறது. ஹாசன் மாவட்டம் சக்கலேஸ்புர் தாலுகாவில், ஏடகுமாரி அருகே உள்ள ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் 15 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு-மங்களூரு ரயில் பாதையில் தடம் மண், கற்கள் மற்றும் மரங்கள் அடைத்ததால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

15 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு

சக்கலேஸ்புர் தாலுகா மரணஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 75-ல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண், மரங்கள், கொடிகள் சாலைக்கு சரிந்து விழுந்ததால், ஷிராடி காடு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மரணஹள்ளி அருகே ஒரு பெரிய மரம் கார் மீது விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, காவல்துறை உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு, காரில் பயணம் செய்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது.

சுற்றுவட்டார பகுதிகளில் சேதம்

கோப்பா தாலுகா பைரதேவுரு கிராமத்தில், பலத்த காற்றும் மழையும் காரணமாக ஒரு பெரிய மரம் வீடு மீது சரிந்தது. பாஸ்கர் பாட்டின் இல்லம் சேதமடைந்தாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் கனமழை

கோலார், வேமகல், மாலூர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 20 வரை கனமழை தொடரும் என இந்திய வானிலைத் துறை அறிவித்துள்ளது.

பாகல்கோட்டில் மலைப்பிரபா ஆற்றில் அணை உடைப்பு

பாகல்கோட்டு மாவட்டம், ஹுனகுண்டா தாலுகா, பெவினலா – சுரளிகல் இடையே மலைப்பிரபா ஆற்றின் பாலம் அருகே தற்காலிக தடுப்பு அணை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ச்சியான கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அந்த அணை உடைந்துவிட்டது. இதன் விளைவாக, தண்ணீர் அருகிலுள்ள புலங்கள் மற்றும் நெற்பயிர் வயல்களில் புகுந்தது. கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

ஹாசன் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் போக்குவரத்து, விவசாயம், மக்களின் அன்றாட வாழ்வு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது பழுதுபார்ப்பு பணிகள் முடியும் நிலைமைக்கு பின்பே உறுதி செய்யப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை தொடர்வதால், மாவட்ட நிர்வாகம் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அவதானத்துடன் நடக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் பருவமழை தீவிரம் அடையும் என தெரிகிறது.
 
 

related_post