dark_mode
Image
  • Monday, 01 June 2026

சிபிஎஸ்இ-யில் ‘பிக்பாக்கெட் திருடர்கள்’ உள்ளனர்; மறுமதிப்பீட்டு கட்டணங்கள் பெயரில் பணம் வசூல் – ராகுல் காந்தி கடும் தாக்கு

சிபிஎஸ்இ-யில் ‘பிக்பாக்கெட் திருடர்கள்’ உள்ளனர்; மறுமதிப்பீட்டு கட்டணங்கள் பெயரில் பணம் வசூல் – ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் மறுமதிப்பீட்டு கட்டணங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஓஎஸ்எம் (On-Screen Marking) எனப்படும் ஆன்லைன் மதிப்பீட்டு முறையால் மாணவர்களின் மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, கல்வித்துறை சேவையாக அல்லாமல் வருவாய் ஈட்டும் வணிகமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். விடைத்தாள் நகல்களைப் பெறுதல், மதிப்பெண்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு போன்ற சேவைகளுக்கு தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், “சிபிஎஸ்இ-க்குள் பிக்பாக்கெட் திருடர்கள் இருப்பதைப் போல இந்த நடைமுறை தெரிகிறது; மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மாணவர்கள் தங்களது விடைத்தாளின் மதிப்பீட்டில் ஏற்பட்ட பிழைகளை சரிசெய்யவே ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு பாடத்திற்கான விடைத்தாள் நகலைப் பெற ரூ.100, மறுகூட்டலுக்கு ரூ.100, மறுமதிப்பீட்டுக்கு ஒரு கேள்விக்கு ரூ.25 என கட்டணம் வசூலிக்கப்படுவதால், முழுமையான மறுமதிப்பீட்டிற்காக ஒரு மாணவர் ரூ.2,000 வரை செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். சுமார் 4 லட்சம் மாணவர்கள் இத்தகைய சேவைகளுக்காக விண்ணப்பிக்கும் போது சிபிஎஸ்இ பெறும் வருவாய் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கைபேசிகள் மூலம் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பிடும் நடைமுறையில் பிழைகள் ஏற்படுவது இயல்பானது என்றும், அந்தப் பிழைகளை சரிசெய்ய வேண்டிய செலவையே மாணவர்கள் சுமக்க வேண்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விமர்சித்தார்.

கல்வி அமைப்பில் நிலவும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகமே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம் எனக் கூறிய ராகுல் காந்தி, “நீட் தேர்வு மட்டுமல்ல, சிபிஎஸ்இ தேர்வும் நிதிமயமாக்கப்பட்டுவிட்டது. கல்வி ஒரு சேவையாக இல்லாமல் வணிகமாக பார்க்கப்படும் போது தவறுகள் திருத்தப்படுவதில்லை; மாறாக அதிகரிக்கின்றன. அதன் விலையை மாணவர்கள் தங்கள் நேரம், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை இழப்பதன் மூலம் செலுத்துகிறார்கள்” என்றார். இந்திய கல்வி அமைப்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும், மாணவர்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான கல்விச் சூழலை உருவாக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

related_post