இன்று சூறாவளி காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், மேகவெடிப்பு காரணமாக, சென்னை மணலி உள்ளிட்ட மூன்று இடங்களில், 27 செ.மீ., அளவுக்கு அதிகனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 37 இடங்களிலும் கனமழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன், மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தில் செப்டம்பர், 6 வரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.