dark_mode
Image
  • Saturday, 10 January 2026

SIR : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியீடு!

SIR : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியீடு!

சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. மதியம் 2 மணி அளவில் தேர்தல் அலுவலர் வெளியிடுகிறார் .

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் 2 மணியளவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின் போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடும் எதிர்ப்பு

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு நடைபெற்ற SIR பணிகளின் போது, சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி SIR பணிகள் தொடங்கின.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்றனர். போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக சில இடங்களில் அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்களும் நடந்தன. இருப்பினும், பணிகள் வேகமாக முடிக்கப்பட்டன. அரசியல் கட்சி முகவர்களும் இந்த பணிகளுக்கு உதவினர். பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அவகாசம் இரண்டு முறை நீட்டிப்பு

டிசம்பர் 4ஆம் தேதிக்குள் இந்தப் பணிகள் நிறைவடைய இருந்தன. ஆனால், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, படிவங்கள் பெறுவதற்கான அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 14ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587 ஆகும். இதில் 6,41,13,772 படிவங்கள் வழங்கப்பட்டு, 6,41,13,221 படிவங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் உண்மைத்தன்மை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, நீட்டிக்கப்பட்ட காலத்தில் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் வெளியீடு

இந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள எண்ணைப் பதிவிட்டு பார்வையிடலாம்.

சரியான முகவரி

இந்த வரைவுப் பட்டியலில், சரியான முகவரியில் உள்ளவர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணமும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

காரணங்கள் சரியில்லை

இந்த பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பித்து, ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

related_post