dark_mode
Image
  • Monday, 15 December 2025

100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் மத்திய அரசு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் மத்திய அரசு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜ அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)' மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு!

தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்குக் கிடைக்குமாம்!

பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு!

வேளாண் சட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

related_post