dark_mode
Image
  • Tuesday, 07 October 2025

தவெகவில் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு முக்கிய பதவி : விஜய் அறிவிப்பு!

தவெகவில் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு முக்கிய பதவி : விஜய் அறிவிப்பு!

சிடிஆர் நிர்மல்குமார், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பலரும் தவெகவில் இணையத் தொடங்கினர். குறிப்பாக விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பும், நிர்மல்குமாருக்கு ஊடகப் பிரிவு துணை பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. அண்மையில் விருப்ப ஓய்வு பெற்று தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிரமாக தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். விமான நிலையத்தில் இருந்து அவர் பரப்புரை செய்த மரக்கடை பகுதிக்கு செல்லவே அவருக்கு சில மணி நேரங்கள் பிடித்தது. அந்த அளவுக்கு அவருடைய பரப்புரை மக்கள் கூட்டத்தால் குறிப்பாக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக பெரம்பலூரில் பரப்புரை செய்ய தாமதமானதால் அங்கு பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை கிளம்பினார். இதனையடுத்து ஒரு நாளில் இரண்டு பகுதிகளில் மட்டும் பரப்புரை செய்யுமாறு திட்டம் வகுத்துள்ளது தவெக.

 இந்த நிலையில் தவெகவில் நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்த, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சிடிஆர் நிர்மல் குமார் ( மதுரை மாவட்டம்) கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி மற்றும் வழக்கறிஞர் அணி பொறுப்பாளராக அவர் இருப்பார். ராஜ்மோகன்(பெரம்பலூர் மாவட்டம்) துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். ஊடக அணி பொறுப்பாளராக இருவர் இருப்பார். மேலும், துணைப் பொதுச் செயலாளர்களாகப் புதிதாக விஜயலட்சுமி (நாமக்கல் மாவட்டம்), அருள் பிரகாசம் (சென்னை மாவட்டம்), டாக்டர் A. ஸ்ரீதரன் Ex. MLA (திருநெல்வேலி மாவட்டம்), சுபத்ரா (தூத்துக்குடி மாவட்டம்) ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

related_post