தமிழகத்தை பாராட்டிய ஐ.நா; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தை ஐ.நா.வே பாராட்டி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;
காலநிலை மாற்ற கொள்கை, நடவடிக்கை என இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு.
துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை திராவிட மாடல் அரசின் காலநிலை மாற்ற செயல்பாடுகள் தான் இந்தியாவுக்கு ப்ளூபிரிண்ட்.
2070-க்கு முன்னரே நெட் ஜீரோ இலக்கை அடைய வேண்டும் என அனைத்து நிலைகளிலும் உழைத்து வருகிறோம். அதனால்தான் ஐ.நா.வே நம்மைப் பாராட்டியுள்ளது. இது ஒரு நீண்ட காலப் பயணம் என்ற போதிலும், நமது முயற்சிகளின் விளைவாகப் பல உடனடிப் பயன்கள் மூன்றாண்டுகளாகக் கிடைத்து வருகின்றன.
எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.