தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் கோடை மழை இயல்பை விட 66% குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description