dark_mode
Image
  • Friday, 09 January 2026

அமித் ஷாவுடன் பேசிக் கொண்டது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு!

அமித் ஷாவுடன் பேசிக் கொண்டது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு!

அதிமுக பாமக கூட்டணி காலையில் உறுதியான நிலையில், மாலையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக, பாமக கூட்டணி

ஏற்கனவே அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை சந்தித்து கூட்டணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

தொகுதி எண்ணிக்கை

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே உறுதியாக இருந்த அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தற்போது பாமக இணைந்துள்ளது இயற்கையான அரசியல் முடிவு என்றும், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அடிப்படை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மற்ற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அமித் ஷா உடன் சந்திப்பு

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கிடையே, இன்றைய நாளிலேயே எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் திட்டமிடல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி பலம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்திருந்தன. அதன் தொடர்ச்சியாக, பாமக தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதால், கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொகுதி பங்கீடு

கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி, தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பில், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையிலான தொகுதி பங்கீடு குறித்த அடிப்படை விவாதங்கள் நடந்ததாக தகவல் வெளியானது.

கூட்டணி விவகாரம்

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மற்ற அரசியல் கட்சிகளையும் கூட்டணிக்குள் இணைப்பது குறித்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருச்சிக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

கூட்டணி வலுப்படுத்துதல்

இந்தப் பின்னணியில், பாமக கூட்டணியில் இணைந்ததும், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும், தமிழ்நாடு அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

related_post