மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி.. குட்நியூஸ்! சிக்கலுக்கு தீர்வு கண்டது நீதிமன்றம்!

சென்னை
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், விதிகளை பின்பற்றாமல் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்திற்கு மாதம் 5 லட்சத்தை 12 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஆனால் 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
கோவில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி, சோமநாத சாமி கோவில் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தம் செய்த கடந்த 2022 ஆம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் மாதத்திற்கு 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும் எனவும் குத்தகை தொடர்பான ஒப்பந்தம் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
BY.PTS NEWS M.KARTHIK
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description