dark_mode
Image
  • Saturday, 31 May 2025

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை.. 35 வயதில் மத்திய அமைச்சராக்கியதே தவறு.. ராமதாஸ் சரமாரி அட்டாக்!

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை.. 35 வயதில் மத்திய அமைச்சராக்கியதே தவறு.. ராமதாஸ் சரமாரி அட்டாக்!

விழுப்புரம்: அன்புமணி ராமதாஸை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அழகான ஆளுயர கண்ணாடியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்ய ராமதாஸ் முயற்சித்த போது, அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாகவே எதிர்த்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.

 

அன்புமணி புலம்பல்

 

அதேபோல் ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் பங்கேற்காமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதை நானும் பார்த்தேன், நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னை பதவியில் இருந்து நீக்கினீர்கள் என்று கேட்டுள்ளார்.

 

மத்திய அமைச்சராக்கியது தவறு

 

இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்துள்ளார். அதற்கான விளக்கத்தை அளிப்பது எனது கடமை. தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை 35 வயதில் எனது சத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்.

 

அநாகரீகமாக நடந்தது யார்?

 

பாண்டிச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்து அதிர்ந்தது. ஒட்டுமொத்த பொதுக்குழு கூட்டமும் ஊடக நண்பர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானீர்கள். மேடை நாகரீகம் என்பதை கடைபிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அநாகரீகமாக நடந்துக்கொண்டது யார்? முகுந்தனை இளைஞர் அணி செயலாளர் என நியமனம் செய்தேன்.

 

பக்குவம் இல்லை

 

உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியா? காலை ஆட்டியது சரியானது செயலா? மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக வீசியது, நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்? உயர்ந்த ஆளுயர கண்ணாடி போல் இருந்த கட்சியை போட்டு உடைத்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என வருந்தினார்கள்.

 

வளர்த்த கடா இடித்தது

 

45 ஆண்டுகள் இந்த கட்சியை கடமை, கன்னியம், கட்டுப்பாடோடு கட்சியை நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்திவிட்டார். கடந்த காலங்களில் நான் கண்ட அவமானங்களும், இழி சொற்களையும் இந்த ஊமை மக்களுக்காக கடந்து வந்துவிட்டேன். வளர்த்த கடா வீறுகொண்டு இடித்ததில் நிலைகுந்து போய்விட்டேன். இதனையும் வெற்றியுடன் கடந்து செல்வேன்.

 

தமிழ்க்குமரனின் நியமனம்

 

அன்புமணி கட்சி இடையூறாக இருந்து வந்துள்ளார். தமிழ்க்குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைத்தேன். ஜி.கே.மணி பிள்ளை. சினிமா, உலக நட்போடும் விளம்பரமும் இயக்கத்துக்கு பயன்பட்டு இயக்கம் வளரும் என நினைத்தேன். அதற்கு தடையாக இருந்து நிராகரித்தார். நியமனம் கடிதம் கொடுத்தேன். ஆனால் ராஜினாமா செய்ய சொன்னார் அன்புமணி. இரண்டு மாதம் பொருத்து பார்த்தேன். முடியவில்லை.

 

தமிழ்க்குமரனுக்கு நடந்த அவமானம்

 

இரண்டு மாதம் கழித்து பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக்குழுவுக்கு அவரும் அவருடைய மனைவி, குழந்தைகள் புதுச்சேரி உணவு விடுதியில் தங்கிவிட்டார்கள். காலை 7 மணி அன்புமணி போன் செய்து தமிழ்க்குமரன் கூட்டத்திற்கு வரக்கூடாது என கூறினார். குடும்பத்தோடு வந்தவர் எவ்வளவு அவமானப்பட்டிருப்பார். இரண்டு மாதம் கழித்து ராஜினாமா செய்தார்.

 

அம்மாவை அடித்தார்

 

இதே செயல் தான் முகுந்தனுக்கும் நடந்தது. பாட்டிலால் அம்மாவை அன்புமணி அடித்தார். ஆனால் அவர்கள் மீது படவில்லை. கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் கட்சியினரின் ஆலோசனையை ஏற்பதில்லை. 19 பேரில் யாராவது ஏதாவது பேசினால் பேசக்கூடாது என கூறினார். என்னை விமர்சியுங்கள் என கட்சிக்காரர்களிடம் கூறுவேன், கடிதம் எழுத சொல்வேன். அப்படியெல்லாம் கட்சியை வளர்த்தேன்.

 

எனக்கு அன்புமணி போட்ட கட்டளை

 

அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு சென்றேன். நான் அங்கு மைக்கை வைத்து பேசக்கூடாதாம், 200 பேருக்கு மேல் கூட்டம் வரக்கூடாது. நான் தங்கியுள்ள உணவு விடுதியில் தான் வந்து பார்க்க வேண்டும். இது எனக்கு அன்புமணி போட்ட கட்டளை. யார் உழைத்து வளர்த்த கட்சி, யார் யாருக்கு கட்டளையிடுவது.

 

மாவீரன் குரு விவகாரம்

 

95 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வந்த கால்கள் என் கால்கள். காடு, மேடு, வரப்பு என வளர்த்த கட்சி. மாவீரன் குருவை கீழ்தரமாக நடத்திய விதம் எற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதனை பார்த்த நான் நிர்வாக குழுவில் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன் என்று தெரிவித்துள்ளார். ராமதாஸின் குற்றச்சாட்டுகள் பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post