7 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: 'வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில் கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடலில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; இதற்காக 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில், நாளை மிக கனமழை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வகையில், ஜூன் 16 வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.