2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
புதுடில்லி: 2028ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்து உள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக கடந்த 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பாரிஸ் ஒலிம்பிக் தான் முடிவா என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டு கொண்டே இருந்தனர். எனது பயணத்தை புரிந்து கொள்ள நான் நேரம் எடுத்து கொண்டேன். பாரிஸ் ஒலிம்பிக்கோடு எனது பயணம் முடியவில்லை.
நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் மனதில் விளையாட்டுத் தீ அணையவில்லை.
அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன். இந்த முறை நான் தனியாக செல்லப் போவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர்லீடராக இணைந்துள்ளான். இவ்வாறு வினேஷ் போகத் கூறியுள்ளார்.
யார் இந்த வினேஷ் போகத்?
* பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் மகளிர் 50 கி.பிரிவில் 100 கிராம் எடை கூடியதாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
* இவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில் எடை அதிகரித்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
* தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* போட்டியில் இருந்து வெளியேற மன வேதனையில் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெற்ற வினேஷ் போகத், பின்னர் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
* இவர் ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.