dark_mode
Image
  • Tuesday, 10 March 2026

 10 மாவட்டங்களில் இன்று கனமழை..!

 10 மாவட்டங்களில் இன்று கனமழை..!

சென்னை: 'வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில், 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை மையம் அறிக்கை:


நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.