dark_mode
Image
  • Friday, 07 March 2025

அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்புப் போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்குவது, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முகப்பாவனை பதிவு செய்யும் THR முறையை கைவிடுவது, பத்து ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், நீண்ட காலமாக பதவி உயர்வு கிடைக்காததால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்களை முகப்பாவனை பதிவு முறையில் வழங்குவதால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

போராட்டத்தில் கலந்து கொண்ட சங்கத் தலைவர்கள், தமிழக அரசின் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நடவடிக்கைகள் முறையாக செயல்பட வேண்டுமெனவும், கோரிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுமெனவும் தெரிவித்தனர்.

 

செய்தியாளர். மு. கார்த்திக், புதிய தலைமைச்செய்தி

 

comment / reply_from

related_post