dark_mode
Image
  • Friday, 01 May 2026

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

 'தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்கோனா, சோலையார், வால்பாறையில் தலா 7; கோவை உபாசி, நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை நிலவரப்படி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். மஹாராஷ்டிரா மற்றும் கேரள கடலோர பகுதிக்கு அப்பால், அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.