"ஆல் ஐஸ் ஆன் ரஃபா" இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் பகிரப்படும் போட்டோ! காரணம் என்ன?

ஒரு அகதிகள் முகாமின் புகைப்படம் "All Eyes on Rafah" என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் "All Eyes on Rafah" என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
காசாவின் ரஃபாவில் அப்பாவி மக்கள் வசிக்கும் கூடாரங்களில் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்திய கொடூரத் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு பல நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஃபா நகரின் வடமேற்கில் "பாதுகாப்பான பகுதி" என்று அறிவிக்கப்பட தால் அஸ்-சுல்தான் பகுதி குறைந்தது எட்டு இஸ்ரேலிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா முழுவதிலும் இருந்தும் இடம்பெயர்ந்து ரஃபாவில் தஞ்சம் புகுந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இஸ்ரேல் ரஃபாவில் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்களின் கூடாரங்கள் பல தீப்பிடித்து எரிந்தன. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் எரிபொருள் சேமித்து வைத்திருந்த டேங்க் வெடித்தது மிகப்பெரிய அளவில் தீ பரவக் காரணமானது.
"ஆல் ஐஸ் ஆன் ரஃபா"
ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததன் எதிரொலியாக, "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" (எல்லா கண்களும் ரஃபாவை நோக்கி) என்ற வாசகத்துடன் கூடிய படம் டிரெண்டாகத் தொடங்கியது. ரஃபா மீது உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளால் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
ரஃபாவில் பொதுமக்கள் வீடுகளை இழந்து அகதிகள் கான் யூனிஸ் நகரில் முகாம்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிய சுமார் 15 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு அகதிகள் முகாமின் புகைப்படம் "All Eyes on Rafah" என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் "All Eyes on Rafah" என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
படம் உண்மையானதா?
ஆனால், இந்த படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. Fact Check வல்லுநரான மார்க் ஓவன் ஜோன்ஸ், இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது, நிஜமானது போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். படத்தில் கூடாரத்தில் நிழல்கள் இயற்கைக்கு மாறான சமச்சீராக இருப்பது இது AI மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பதற்கான அடையாளம் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் பாலஸ்தீனப் பகுதி அலுவலகத்தின் இயக்குநர் ரிக் பீபர்கார்னின் ஓர் அறிக்கையில் இருந்து, "All Eyes on Rafah" என்ற வாசகம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description